Sunday, November 28, 2010

யாதும் ஊரே யாவரும் கேளிர் - ஒரு புதிய பார்வை

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற செய்யுள் வரிகள் நாமெல்லாம் அறிந்ததுதான்.பலரும் இந்த இரண்டு வரிகளுக்கு மேல் படித்திருக்கமாடார்கள்.ஏனென்றால் இந்த இரண்டு வரிகளுக்குப் பொருள் எளிதில் புரிந்துவிடும்.இன்னும் சற்று கூடுதலாக அறிந்திருப்போர் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதற்குப் பொருள் அறிந்தவர்களாக இருப்பார்கள்.கணியன் பூங்குன்றனார் எழுதிய இந்தப்பாடல் 16 வரிகளே ஆகும்.இந்தப்பாடலின் பொருள் குறித்து பல கருத்துகள் உண்டு.

இந்நிலையில் அண்மையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மைய நோக்கப் பாடலில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இந்தப் பாடலின் வரிகளை இணைத்திருந்தார்.அந்தப் பாடலை இசையோடு பாடிக்கொண்டிருந்தபோது,கணியன் பூன்குன்றனார் இந்தப் பாடலை எந்தப் பொருளில் பாடியிருப்பார் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது.

சில நாட்களுக்கு முன் எனது ஊரான காரைக்குடி சென்றிருந்தேன்.எப்போதும் ஊருக்குச் சென்றால் எனது தமிழாசிரியர் பாவலர்மணி ஆ.பழநி அவர்களைச் சந்தித்து கலந்துரையாடுவது வழக்கம்.அப்போதெல்லாம் அரசியல் பற்றியும்,தமிழ் குறித்தும் உரையாடுவேன். இந்த முறை சென்றபோது யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல் பற்றி பேசினேன்.இப்பாடல் குறித்து அவர் சொன்ன செய்தி எனக்குப்புதிதாக இருந்தது.

”கணியன் பூங்குன்றனார் ஆசீவகம் என்னும் சமயத்தைச் சார்ந்தவர்;அந்தச் சமயத்தின் கொள்கையைத்தான் இந்தப்பாடல் கூறுகிறது,’’ என்று பழநி அய்யா அவர்கள் குறிப்பிட்டார்.இது குறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறிய அவர்,முனைவர் நெடுஞ்செழியன் அவர்கள் ஆசீவகம் குறித்து ஆய்வு நூல் எழுதியுள்ளார்,அதில் மேலும் சில தகவல்கள் கிடைக்கலாம்;எனவே அந்நூலைப் பெற்றுத்தர உதவிசெய் என்றார்.அவ்வாறே அந்நூலையும் பெற்றுத்தர உதவினேன்.

சில நாட்கள் கழித்து பழநி அய்யா அவர்களிடம் கணியன் பூங்குன்றனாரின் பாடலுக்கான விளக்கத்தை எனக்கு எழுதித் தரமுடியுமா?என்று தொலைபேசியில் கேட்க,அவர் அன்றே எழுதி அனுப்பிவிட்டார்.
கணியன் பூங்குன்றனாரின் பாடலும் அதற்கு பாவலர்மணி ஆ.பழநி அவர்கள் எழுதிய கருத்துரையையும் இங்கே தருகிறேன்.

அதற்கு முன்பாக ஆ.பழநி அவர்கள் பற்றி சில குறிப்புகள்: இவரது ’அனிச்ச அடி’ என்னும் நூல் தமிழக அரசின் பரிசினைப்பெற்றது;பல பல்கலைக் கழகங்களில் பாடமாக உள்ளது.சிலப்பதிகாரம் குறித்து பல ஆய்வு நூல்களை எழுதியுள்ள இவர்,சாலிமைந்தன்,காரல் மார்க்ஸ் ஆகிய காப்பியங்களைப் படைத்தவர்.பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா? என்ற ஒப்பாய்வு நூலையும் எழுதியுள்ளார்.காரைக்குடி மீ.சு.மேல் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.சீரிய பகுத்தறிவாளர்.
பழநி அய்யா அவர்களிடம் மூன்றாண்டுகள் தமிழ் கற்றதால்தான் தமிழ் மீது பற்றும்,தமிழ் வளர்ச்சியில் குன்றா ஆர்வமும்,ஓரளவுக்கேனும் எழுதும் ஆற்றலும் எனக்கு வாய்த்தது.


 ஆ.பழநி அவர்கள் எழுதி அனுப்பியவாறு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலை எப்படிப் பிரித்துப் படிக்க வேண்டும் என்ற முறைப்படி கீழே வழங்கப்பட்டுள்ளது.கருத்துரையும் அவ்வாறே...


1      யாதும் ஊரே  யாவரும் கேளிர்

2      தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;

3      சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதென்று மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே;                                                                                                             
                                                     
மின்னொடு
4      வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம்; 
                          ஆதலின்  மாட்சியின்
                                                     
5      பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
                                                                        -கணியன் பூங்குன்றன்
                                                                        (
பாடல்192, புறநானூறு)

பாடலின் கருத்து:
  1. எல்லா ஊரும் எம்முடைய ஊரே; எல்லா மனிதர்களும்                                                      எம்முடைய உறவினர்களே;
  2. தீமையாயினும் சரி;நன்மையாயினும் சரி;அது பிறர் கொடுக்க வருவதில்லை.துன்புறுவதாயினும்-அத்துன்பத்திலிருந்து விடுபடுவதாயினும் சரி;அதுவும் பிறரால் நிகழ்வதில்லை. இவையெல்லாம் அவன் செய்த செயலின் எதிர்விளைவுதான்.அதாவது பழவினையின் பயன்தான்.
  3. இறப்பு என்பதும் புதுமையானதன்று;அது முன்னரே முடிவுசெய்யப்பட்டதுதான்.வாழ்தல் இனிமையானது என்று எண்ணி நாங்கள் மகிழ்ச்சி கொள்வதில்லை.ஏனெனில் அது  துன்பங்களுக்கு இடையே எப்போதாவது வந்து செல்வதுதான். வெறுக்கத்தக்க செயல்கள் நடைபெறும்போது நாங்கள் அவற்றைத் துன்பமென்று ஒதுக்குவதில்லை.ஏனெனில் அவற்றை நுகர்வதைத் தவிர வேறு வழியில்லைஎன்பதனால். ஆம்,பழவினை அத்துணை வலிமையானது.
4.    மின்னி முழங்கிய வானம் மழைத்துளிகளை இடைவிடாது பொழிய,அதனால் கல்லிலே மோதிப் பேரொலியோடு வருகின்ற புதுவெள்ளப் பேராற்றில் அகப்பட்ட ஒரு புணை(மிதவை,ஓடம்) வெள்ளம் எங்கெல்லாம் செலுத்துமோ அங்கெல்லாம் அலைபுரண்டு திரியுமே அல்லால் தான்விரும்பிய இடத்தில்  கரை சேர முடியாது.அதைப்போல அரிய உயிரானது பழவினை செலுத்தும் வழியிலேதான் செல்ல முடியுமேயன்றித் தனக்கென தனிவழியைத் தேடிச்செல்ல முடியாது என்பதை மேலோர்கள் காட்டிய வழியில் அறிந்து கொண்டுள்ளோம்.
  1. அதனால்தான் நாங்கள் பெருமையிற் சிறந்தவர்களைப் போற்றுவதுமில்லை;கீழோரைத் தூற்றுவதுமில்லை.ஏனெனில் அவர்கள் பெரியோராக இருப்பதற்கும்,சிறியோராக இருப்பதற்கும் பழவினைதான் காரணமேயன்றி இவர்தம் முயற்சியோ-முயற்சி இன்மையோ காரணம் அன்று.இவர்கள் காரணர் அல்லர் என்றால் இவர்களைப் போற்றுவதும் தூற்றுவதும் எதற்காக? ஆதலின் எங்களுக்கு எதன்மீதும் – எவர்மீதும் வெறுப்புமில்லை;தனிப்பட்ட விருப்பும் இல்லை. இந்த மன நிலையில்தான் கூறுகின்றோம்;எல்லா ஊரும் எம்முடைய ஊரே;எல்லா மக்களும் எம்முடைய உறவினர்களேஎன்று.
      கருத்துரை: பாவலர்மணி ஆ.பழநி-காரைக்குடி

Friday, November 5, 2010

தீபாவளிப் பட்டாசு படுத்தும் பாடுகள்


பொது ஒழுக்கக் கேட்டை உருவாக்கும் பட்டாசு வெடிக்கும் வழக்கத்தை இந்து மதத் தீபாவளி இந்த நாட்டிற்குக் கொண்டுவந்தது.ஒய்வைத் தேடும் மனிதனுக்கு விழாக்கள் தேவைதான்.ஆனால்,அது தனக்கும் ,பிற மனிதருக்கும்,சமூகத்திற்கும் துன்பம் தருவதாக அமையலாமா? தீபாவளி அப்படித்தான் அமைந்துள்ளது.பக்கத்து வீட்டுக்காரன் கொண்டாடுவான்,பணக்காரன் கொண்டாடுவான் என்பதற்காக ஏழையும் கொண்டாடுகிறான்.அவனிடம் பணம் ஏது?அது மத வழக்கம் ஆகிவிட்டபடியால்,கடன் வாங்கியாவது கொண்டாடவேண்டும் என்று முடிவெடுக்கிறான்.கடன் படுகிறான்;பட்டாசுகளை வாங்கி காசை இழக்கிறான்.ஒரு நாள் மகிழச்சிக்கு ஊரையே குப்பைகளால் நிறைத்தும்,அளவுக்கு அதிகமான ஓசைகளாலும்,காற்றை மாசுபடுத்தியும் உலக வெப்பமயத்தை அதிகரிக்க இந்த பட்டாசு வெடிப்பும் ஒரு காரணமாக இருக்கிறது.

அறிவுக்குப் பொருத்தமில்லாததுடன்,தமிழினத்துக்கு எதிரானது மட்டுமல்லாமல் இழிவுபடுத்தும் இந்த தீபாவளியை பல ஆண்டுகளாக பெரியாரின் தொண்டர்கள் புறக்கணித்து வருகிறார்கள்;தமிழர்களைப் புறக்கணிக்கும்படி வேண்டுகோள்விடுத்தும் வருகிறார்கள்.இதை இன்னொரு கோணத்தில் அண்மைக்காலமாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்  அணுகுவது பாராட்டுக்குரியது. தீபாவளிப் பட்டாசுகளால் ஏற்படும் தீமையை விளக்கி  பூவுலகின் நண்பர்கள், குக்கூ குழந்தைகள் வெளி, பாட்டாளிகள் படிப்பகம் ஆகிய அமைப்புகள் இந்தத் தீபாவளியின் போது நல்ல விழிப்புணர்வைச் செய்துள்ளனர்.சென்னையின் குறுகிய தெரு ஒன்றில் வசிக்கும் என் காதுகளைப் பிளந்து கொண்டிருந்த பட்டாசு சத்தத்துடன் நான் படித்த பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள அந்தச்செய்தி:- 

தீபாவளிக்கு எவ்வளவு பட்டாசு வெடிக்கிறோம் என்பதில் குழந்தைகளிடம் மட்டுமின்றி, பெரியவர்களிடையேயும் போட்டி நிலவுகிறது. இதற்காக அதிக பட்டாசுகளை, அதிக சப்தம் தரும் பட்டாசுகளை, வாணவேடிக்கை மத்தாப்புகளை வாங்கிக் குவிக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நாட்டில் ரூ. 700 கோடிக்கு மேல் மதிப்புள்ள பட்டாசுகள் தீபாவளிக்காக வாங்கப்படுகின்றன. ஒரு நாள் கூத்துக்காக, ஒரு சில நிமிடங்களில் கரியாவதற்காக இவ்வளவு கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்கப்படுகின்றன.

பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் மிகவும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்கள் கலக்கப்படுகின்றன. இவை காற்றை மாசுபடுத்துகின்றன. தீபாவளி அன்றைக்கு காலையிலும், தீபாவளிக்கு அடுத்த நாள் காலையிலும் உங்கள் ஊரை புகைமூட்டம் எப்படி சூழ்ந்திருக்கிறது என்று பாருங்கள். என்றைக்கும் இல்லாத அந்த புகைமூட்டம் எப்படி உங்களை பாதிக்கப்போகிறது என்று அப்பொழுது புரியும்.எதிரே வரும் ஆள் தெரியாத அளவுக்கு அந்த புகைமூட்டம் இருக்கும். நீங்கள் பட்டாசு வெடிக்காவிட்டாலும்கூட, இந்தப் புகை சுவாசக் கோளாறுகளை தூண்டிவிடும். ஏனென்றால் இந்தப் புகையில் நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, கந்தக ஆக்சைடு, உலோக ஆக்சைடுகள் இருக்கின்றன.

பட்டாசு, மத்தாப்புகளில் வண்ணங்களை உருவாக்கவும் சப்தத்தை அதிகரிக்கவும் சேர்க்கப்படும் வேதிப்பொருள்கள் கீழ்க்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்:

செம்பு: சுவாசப் பாதையில் எரிச்சல்
காட்மியம்:  ரத்தசோகை, சிறுநீரக பாதிப்பு
காரீயம்: நரம்பு மண்டலப் பிரச்சினைகள்
மக்னீசியம்: இதன் தூசும் புகையும் உலோகப் புகை காய்ச்சலை ஏற்படுத்தலாம்
மாங்கனீசு: உளவியல் தொந்தரவு, பக்கவாதம், வலிப்பு
சோடியம்: ஈரப்பத காற்றுடன் வினைபுரிந்து தோலை பாதிக்கலாம்
துத்தநாகம்: குமட்டல், வாந்தியை உருவாக்கலாம்
நைட்ரேட்: மூளை வளர்ச்சியை பாதிக்கலாம்
நைட்ரைட்: கோமாவுக்கு இட்டுச் செல்லலாம்

உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஒரு பட்டாசில் உள்ள வேதிப்பொருள்களின் பட்டியல், அதன் அட்டையில் அச்சிடப்பட வேண்டும். ஆனால் இது செய்யப்படுவதில்லை.
மேற்கண்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் நம்ம ஊர் காவல்துறை இதை நடைமுறைப்படுத்துவதில்லை. அத்துடன் 125 டெசிபலுக்கு மேலாக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை செய்துள்ளது. ஆனால் சந்தையில் கிடைக்கும் சில பட்டாசுகள் ஏற்படுத்தும் சப்த அளவு கீழே தரப்பட்டுள்ளது. இவை அந்தத் தடையை சாதாரணமாக மீறுகின்றன.
ஆட்டம் பாம் - 145 டெசிபல், சரவெடி - 142 டெசிபல், தண்டர்போல்ட் - 140 டெசிபல், கிங்பிஷர் ஷெல் - 141 டெசிபல், ஹைட்ரஜன் பாம் - 122 டெசிபல்

இந்தச் சப்தத்தை நீங்கள் கேட்டால் உங்கள் காது செவிடாவதற்கு மிக அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிக சப்தத்தால் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உயர் ரத்த அழுத்தமும் தூங்குவதில் பிரச்சினைகளும்கூட ஏற்படலாம்.

பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காரணம்: அவர்களது நுரையீரல் வளர்ந்து வரும் நிலையில் இருக்கிறது. குறைவான மாசுபாட்டைகூட அவை தாங்குவதில்லை. எதிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு சுவாசக் கோளாறு ஏற்பட பட்டாசுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இப்படி நமது குழந்தைகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, முகம் தெரியாத எத்தனையோ குழந்தைகள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பட்டாசு தயாரிப்பில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று பல்வேறு அமைப்புகளும் குழந்தைகளும் போராடியபோது, "இதைத் தயாரிப்பதில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படவில்லை" என்று பட்டாசு, மத்தாப்பு அட்டைகளில் அச்சிடப்பட்டது. ஆனால் உண்மையில் அப்படி நடப்பதில்லை. குறைந்த கூலிக்கு, மிக வேகமாக வேலைகளை முடித்துத் தரும் குழந்தைகளை எப்படி பட்டாசு ஆலை முதலாளிகள் பேசாமல் விடுவார்கள்.

குட்டி ஜப்பான் என்ற பட்டப் பெயர் கொண்ட சிவகாசி அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல குழந்தைகள் இன்றைக்கும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தவாறே பட்டாசு தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களது பெற்றோருக்கு இதே வேலையை அந்த முதலாளிகள் தருவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு கூலி அதிகம் தர வேண்டி இருக்கும், கூலிஉயர்வு தராவிட்டால் வேலைநிறுத்தம் செய்யவும் அவர்கள் தயங்கமாட்டார்கள் என பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக முதலாளிகள் நினைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், குழந்தைகளோ, பெரியவர்களோ யார் பட்டாசு தயாரித்தாலும், அவர்களுக்கு முறைப்படி கையுறை, பாதுகாப்பு வசதிகள், மருத்துவ வசதிகள் செய்து தரப்படுவதில்லை.

ஆனால் 100 - 150 ஆண்டுகளுக்கு முன் இன்றைக்கு உள்ளதுபோல் பெரிய அளவில் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் இல்லை. அப்போது நம்மிடம் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் பழக்கமும் இருந்ததில்லை.” 

பூவுலகின் நண்பர்கள் அளித்த இந்தத் தகவலுடன் இன்னொரு தகவலும் தீபாவளி நாளைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்(05-11-2010)படிக்கநேர்ந்தது.தீபாவளிப் பட்டாசு ஓசைகளால் அதிகம் பாதிக்கப்படுவது வீட்டு விலங்குகள்தானாம்.நாய்,பூனை,மாடு,ஆடு,முயல்உள்ளிட்ட வீட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு அதிக ஓலியினால் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.அதாவது,மனிதர்களின் காது கேட்கும் ஒலித் திறனைவிட இவைகளின் காது கேட்கும் ஒலித் திறன் மிகவும் நுண்ணியமானது.எனவே,அதிக ஒலியை அவை தாங்காது.அச்சத்தில் உடல் நடுக்கம் ஏற்படுமாம்;நாய்கள், ஒலியைக் கேட்டமாத்திரத்தில் எங்காவது அமைதியான இடம்தேடி ஓடிவிடுகின்றனவாம்.தீபாவளிக் காலங்களில்,தான் இருந்த இடத்திலிருந்து வேறு இடத்திர்கு ஓடிச் சென்று மீண்டும் தன்னுடைய இடத்திற்கு வரும் வழிதெரியாமல் திரியும் நாய்கள் அதிகம் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. 

மனிதர்களை மட்டுமல்லாமல்,விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை தீபாவளி.  தீபாவளி வந்துவிட்டாலே பட்டாசுச் சத்தம் காதைப் பிளக்கிறது.சூழல் கேட்டை ஏற்படுத்தும் முக்கியக் காரணியாக இந்தப் பட்டாசுகள் இருக்கின்றன.ஒலி மாசையும்,சுற்றுச் சூழல் மாசையும் ஒருசேரக்கெடுக்கும் தீபாவளிப் பட்டாசுகள் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு வருவதுபோல் தெரிகிறது.சில ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாலும்,விழிப்புணர்வுப் பிரச்சாரங்களாலும் மாற்றம் தெரிகிறது.இந்த ஆண்டு பட்டாசின் விலைகள் அதிகரித்ததால் பட்டாசுச் சத்தம் சற்றுக் குறைந்ததை சென்னையில் உணரமுடிந்தது.என்றாலும்,பணம் படைத்தவர்கள்,மார்வாரிகள்,புதுப் பணக்காரர்கள் தங்களின் செல்வச் செழிப்பைக் காட்டிக் கொள்ள பட்டாசை ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி கொளுத்தினார்கள்.நாம் மேற்சொல்லிய தகவல்கள் வெகு மக்களின் காதுகளை எட்டும்போது ஏதாவது உருப்படியான பலன்கள்.ஏற்படலாம்.ஆனால்,இதையெல்லாம் எந்த ஊடகமும் சொல்வதில்லை;மாறாக அவை தீபாவளி மலர்களின் மூலமும்,சிறப்பு நிகழச்சிகளின் மூலமாகவும் பணம் சம்பாதிக்கின்றன.தங்களின் கல்லாவை நிரப்ப அவர்களுக்கு தீபாவளி ஒரு கருவி அவ்வளவுதான்.மக்கள் நலனாவது மண்ணாங்கட்டியாவது.  

Friday, October 29, 2010

அம்பேத்கரின் உறுதிமொழிகள்

1956 அக்டோபர் 14 ஆம் நாள் பார்ப்பன ஆதிபத்திய வருணாசிரம இந்து 
மதத்திலிருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட தோழர்கள் அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் தலைமையில் பவுத்த மார்க்கம் தழுவினார்கள்.அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகள்:-

1.பிரம்மனையோ விஷ்ணுவையோ சிவனையோ நான் கடவுள் என்று கருதமாட்டேன். அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

2.இராமனையோ, கிருஷ்ணனையோ நான் கடவுள் என்று கருதமாட்டேன்; அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

3.இந்துத் தெய்வங்களான கவுரி, கணபதி, இத்தியாதிகளை நான் கடவுள் என்று ஏற்க மாட்டேன்; அவைகளை வழிபாடு செய்யவும் மாட்டேன்.

4.கடவுள் பிறவி எடுத்ததாகவோ, எந்தவொரு உருவத்தில் அவதாரம் செய்ததாகவோ நான் நம்பமாட்டேன்.

5.பகவான் புத்தர்; மகா விஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். அப்படிப் பிரச்சாரம் செய்வது விஷமத்தனமானது, தவறானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

6.சாவு சம்பந்தப்பட்ட இந்து மதச் சடங்கான சிரார்த்தத்தை நான் ஒரு போதும் செய்யமாட்டேன்; இறந்தவர்களின் பெயரால் நான் பிண்டம் கொடுக்கவும் மாட்டேன்.

7.பவுத்தத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக நான் என்றுமே நடக்க மாட்டேன்.

8.பார்ப்பனர்களால் நடத்தப்படும் சமஸ்காரங்கள் எதனையும் நான் என்றுமே ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

9.அனைவரும் சமம் என்ற கொள்கையே நான் நம்புகிறேன்.

10.சமத்துவத்தை நிலைநாட்ட நான் முயல்வேன்.

11.பகவான் புத்தர் காட்டிய எட்டு அம்ச வழியை நான் பின்பற்றுவேன்.

12.தம்மதத்தின் 12 பரமிதங்களையும் நான் பின்பற்றுவேன்.

13.எல்லா உயிர்ப் பிராணிகளிடத்தும் நான் கருணை காட்டுவேன்
அவைகளைக் காக்க முயலுவேன்.

14.நான் பொய் சொல்லமாட்டேன்.

15.நான் திருட மாட்டேன்.

16.காமத்தில் நான் உழல மாட்டேன்; பாலுணர்வில் அத்துமீற மாட்டேன்.

17.போதைக்குக் காரணமான குடியையோ, மதுவையோ நான் அருந்த மாட்டேன்.

18.ஞானம், கருணை, அறிவுரை ஆகியவற்றின் அடிப்படையிலான புத்தரின் போதனைகளுக்கு இணங்க என் வாழ்வை உருவாக்க நான் முயலுவேன்.

19.பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும் சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும், மனிதர் களின் விடுதலைக்குக் கேடாக இருப்பது மான இந்து மதத்தை நான் கைவிட்டு விட்டு இன்று புத்த மதத்தைத் கைக்கொள்ளுகிறேன்

20.புத்த தம்மமே சிறந்த மார்க்கம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

21.இன்று புதிய பிறவி எடுக்கிறேன் என்று நான் நம்புகிறேன்.

22.புத்த தம்மத்துக்கு இணங்கவே இன்று முதல் நான் செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

பெரியாருக்கு எடைக்கு எடை வழங்கிய பொருட்கள்


தந்தை பெரியார் அவர்களுக்குத் தமிழர்கள் போட்டி போட்டுக் கொண்டு அன்பளிப்புகளைக் குவித்தனர். எடைக்கு எடை எத்தனை எத்தனை வகையான பொருள்களை எல்லாம் வாரி வழங்கினர்! இறைவனுக்குத் தான் துலாபாரம் என்ற நிலையைத் துடைத்தெறிந்து இறைவன் ஏதடா? என்ற பகுத்தறிவு வினா எழுப்பிய ஈரோட்டு இறைவனுக்குத்தான் தமிழ் நாட்டு மக்கள் இத்தனை இத்தனை வகையான அன்பளிப்புகள்.
எடைக்கு எடை வெள்ளி ரூபாய் (தஞ்சை, 6.11.1957), எடைக்கு எடை நவதானியம் (லால்குடி, 24.9.1963), கார் டயர் - ட்யூப்புகள் (கள்ளப்பெரம்பூர், 2.11.1963), எடைக்கு எடை மிளகாய் (பெருவளப்பூர், 10.6.1964), எடைக்கு எடை எண்ணெய் (இடைப்பாடி, 11.9.1964), எடைக்கு எடை மஞ்சள் (ஈரோடு, 3.10.1964), துவரம்பருப்புத் துலாபாரம் (திருச்செங்கோடு, 17.10.1964), எடைக்கு எடை காய்கறி (திருவள்ளூர், 21.10.1964), எடைக்கு மேல் ஒன்றரை மடங்கு படுக்கை விரிப்புகள் (பெட் ஷீட்டுகள்) (கரூர், 25.10.1964), எடைக்கு எடை திராட்சைப் பழம் (பெங்களூர், 15.11.1964), எடைக்கு எடை இங்கிலீஷ் காய்கறிகள் (பெங்களூர், 6.11.1964), எடைக்கு எடை அரிசி (திருவாரூர், 1.12.1964), பால் துலாபாரம் (திருச்சி, 10.12.1964), எடைக்கு எடை இரண்டு காசுகள் (வ.ஆ., திருப்பத்தூர், 13.12.1964), எடைக்கு எடை சர்க்கரை (திருக்கழுக்குன்றம், 14.12.1964), பெட்ரோல் துலாபாரம் (குளித்தலை, 10.1.1965), எடைக்கு எடை காப்பிக் கொட்டை (சிதம்பரம், 16.1.1965), எடைக்கு எடை பிஸ்கட்டுகள் (பண்ருட்டி, 18.1.1965), எடைக்கு எடை மணிலா எண்ணெய் (அரகண்டநல்லூர், 19.1.1965), எடைக்கு எடை கைத்தறி நூல் (குடியாத்தம், 21.1.1965), எடைக்கு எடை நெல் (செங்கம், 22.1.1965), எடைக்கு எடை நெல் (அனந்தபுரம், 23.1.1965), எடைக்கு எடை இரு மடங்கு வாழைக்காய் (வள்ளியூர், 1.5.1965), எடைக்கு எடை பருப்பு மற்றும் உப்பு (தூத்துக்குடி, 2.5.1965), எடைக்கு எடை சர்க்கரை (அலங்காநல்லூர், 16.2.1970), எடைக்கு எடை நெல், வெங்காயம், உப்பு (பெண்ணாடம், 21.9.1970), நெல் துலாபாரம் (இலந்தங்குடி, 8.7.1972).எடைக்கு எடை கண்ணாடி டம்ளர்(காரைக்குடி என்.ஆர்.சாமி வழங்கியது)
இவை அன்னியில் டயர் வண்டி (லால்குடி), கறவைப் பசு (தஞ்சை).
புளி, பச்சைப் பட்டாணி, மிளகாய், துவரை, கொத்துக்கடலை, உளுந்து, தேங்காய், ஆட்டுக்கிடா, தட்டைப்பயிறு, காளைக்கன்று, ரூ.3500 மதிப்புள்ள தென்னந்தோப்பு பட்டயம், பசுமாடு, எள், பச்சைப்பயறு, கோதுமை, அரிசி, கழகக் கொடிபோட்ட முக்கால் பவுன் மோதிரம், தேங்காய், உப்பு, நெல், கிழங்கு, எலுமிச்சம்பழம், வெங்காயம், ராகி, கம்பு, மலர்கள், முத்துச்சோளம், எருமை மாடு, செங்கல் ஆயிரம், விறகு 5 எடை என்று கொடுக்கப்பட்டது உண்டு.
ஒரு கடவுள் மறுப்பாளருக்கு மக்கள் அள்ளி அள்ளிக் கொடுத்து, தம் அன்பு வெள்ளத்தால் மூழ்கடித்தது - தந்தை பெரியார் என்ற மாசற்ற மாபெரும் புரட்சியாளருக்கு மட்டும்தான்.
சில இடங்களில் கோயிலில் பயன்படுத்தும் அதே சப்பரத்தில் - தேர்களில் கூட தந்தை பெரியாரை அமர வைத்து வீதி வீதியாக ஊர்வலமாக அழைத்துச் சென்றதுண்டு.
தெய்வச் சிலையை தெப்பத்தில் வைத்து அழைத்துச் சென்றதுபோல, தெய்வத்தை சில்லு சில்லாக உடைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுக்கும் தெப்பத் திருவிழா நடத்தப்பட்டதுண்டு.

                                      - விடுதலையில்(26-10-2010) `மின்சாரம்’எழுதிய கட்டுரையில் இருந்து...

Thursday, October 14, 2010

ஆணும் பெண்ணும் அறிவிலும் சமம்


லக வரலாற்றில் பெண்ணுரிமை குறித்து அதிகம் பேசிய ஆண் ஒருவர் உண்டென்றால் அவர் தந்தை பெரியார் தான்.சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலம் முதலே பெண்ணுரிமை பற்றி பேசத்தொடங்கிவிட்டார். உலகில் பெண்கள், ஆண்களைப்போல சரிபங்கு உடையவர்கள்; ஆண்களுக்குச் சரிசமமானவர்கள்; அறிவு, ஆற்றல், சக்தி அனைத்திலும் ஆண்களுக்குச் சற்றும் குறைந்தவர்கள் அல்ல, என்கிறார் பெரியார். இந்தக் கருத்தை அவர் சொன்னது 1930 களில். இப்போது அறிவியல் ஆய்வின் மூலம் இக்கருத்து உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கார்டிலியா பைன்
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனநல நிபுணர் கார்டிலியா பைன் (cordelia fine), டெலுஷன்ஸ் ஆப் ஜென்டர் (delusions of gender) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இதில்,ஆண் பெண் இருவருக்கும் மூளை மற்றும் அதன் நரம்புகள் வளர்ச்சியில் சிறு சிறு வேறுபாடுகளைத் தவிர பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. தோற்றத்தில் மட்டுமே மாற்றங்கள் காணப்படுகின்றன என்று கூறியுள்ளார். இக்கருத்தினை, சிகாகோ மருத்துவப் பள்ளியின் பேராசிரியர் லைஸ் எலியட்டும் ஆமோதித்துள்ளார். மேலும் இவர், பிள்ளைகளின் அறிவு வளர்ச்சி என்பது மரபு வழியாக வருவது அல்ல; மாறாக, கற்பதன் மூலமே வளர்ச்சி பெறுகின்றனர். சிறுவன், சிறுமி, ஆண், பெண் இவர்களுக்கிடையேயான அறிவுத் திறனில் வேறுபாடு இருக்கலாம். அவர்களுக்கு உள்ள தனித்திறன், சிறப்பியல்பு, ஆளுமைத்திறன் ஆகியவை அவர்களின் வாழ்க்கைச் சூழல் கொடுக்கும் அனுபவம் மூலமே பெறப்படுகிறது. இதன் மூலம் அவர்களின் அறிவு வளர்ச்சி மேம்படுகிறது என்றும் கூறியிருக்கிறார். பிறப்பினால் ஆணுக்கும், பெண்ணுக்கும் உடல் உறுப்புகளைத் தவிர வேறு எந்த வேறுபாடும் இல்லை.உலக நடப்புகளில் எல்லாவற்றிலும் பெண்கள் ஈடுபட்டுவிட்டால், அவர்களும் ஆண்களைப்போலவே எல்லாத்துறைகளிலும் வெற்றிக் கொடிநாட்டுவார்கள். இதை பெரியார் அன்று சொன்னார்; அறிவியல் இன்று சொல்கிறது.

வந்தாச்சு செயற்கைக் கருப்பை
முட்டையிலிருந்து கருவை உருவாக்கும் இயற்கையான கருப்பை பழுதடைந்து விட்டால், அதற்கு மாற்றாகச் செயற்கைக் கருப்பை ஒன்றை அறிவியல் உலகம் கண்டுபிடித்துவிட்டது.
அமெரிக்க நாட்டின் பிரவுன் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் செயற்கைக் கருப்பையை (Ovary) உண்டாக்கியுள்ளனர். மருத்துவமனை நோயாளிகள் அன்பளிப்புச் செய்த உயிர் அணுக்களில் (செல்களில்) இருந்து இதைச் செய்திருக்கிறார்கள். முட்டைகளை வளர்த்து, உண்மையான கருப்பையைப் போன்றே, அவை முழுமை பெறுவதற்கு இந்தச் செயற்கைக் கருப்பை உதவக் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை டெலகிராஃப் இதழ் வெளியிட்டிருக்கிறது.
சான்ட்ரா கார்சன்
பிரவுன் பல்கலைக் கழகத்தின் பிள்ளைப் பேறு இயல் பேராசிரியர் சான்ட்ரா கார்சன், சில பெண்கள் கருவுறுவதற்கு ஏன் இயலுவதில்லை என்பதை அறியவும் இந்தச் செயற்கைக் கருப்பை பயன்படும் என்று கூறுகிறார்..
கொடையாளிகளின் உயிர் அணுக்களை தேன் கூட்டுத் துளைகளின் வடிவில் வளர்க்கிறார்கள். பின்பு மனித முட்டையின் உயிர் அணுக்களை (செல்களை) அவற்றில் இடுகிறார்கள்.
சில நாள்களில் உயிர் அணுக்கள், வளராத முட்டைகளை மூடிக்கொள்கின்றன. பின்பு அம்முட்டைகள் முழுமையாக வளர்கின்றன. இக்கட்டத்தில் அவற்றைக் கருப்பையில் செலுத்தி கருவுறச் செய்யலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஒரு கருவகம் முக்கியமாக மூன்று உயிரணு (செல்) வகைகளால் ஆனது. மூன்று வகை செல்களைக் கொண்டு முப்பரிமாண (3டி) திசு அமைப்பை இப்பொழுதுதான் உண்டாக்கியுள்ளனர். இது மிக மிகப் புதுமையானது. முப்பரிமாண (3டி) பொறியியல் கொள்கைகளை பயன்படுத்தி முதன்முறையாக வெற்றி பெறப்பட்டிருக்கிறது, என சான்ட்ரா கார்சன் குறிப்பிட்டுள்ளார்.
முட்டைகளை நம்பகத் தன்மையுடன் முழுமை அடையச் செய்து, செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்வதில், இந்தக் கண்டு பிடிப்பு பெரிய நடைமுறைப் பயனளிக்க வல்லது. கடினமான ஒரு பாத்திரத்தில் முட்டைகளை வளர்த்தெடுத்தால், அவற்றின் வடிவம் சிதையக்கூடும். ஆனால், செயற்கைக் கருவகத்தில் அவற்றை வளர்க்கும் பொழுது அவை முழுமையாக வளர்வதற்கு வாய்ப்பு அதிகம், என கிளாஸ்கோ, ஜி.சி.ஆர்.எம் கருவுறச் செய்யும் மய்யத்தின் இயக்குநர் ரிச் சர்டு ஃபிளமிங் கூறுகிறார்.
அதிகப் பிரசங்கி
திகப் பிரசங்கிகள் என்ற சொல்லை நாம் சிறுவயதில் இருந்தே கேட்டிருக்கிறோம். வயதை மீறிய வார்த்தைகளைப் பேசுவதுஎதையும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் பேசுவது,தகவல்களைசெய்திகளைத் தெரிந்துகொள்ளாமல் பேசுவது என இந்த அரைகுறைப் பேச்சைத்தான் அதிகப்பிரசங்கித் தனம் என்று சொல்வார்கள்.
இப்படித்தான் அதிகப் பிரசங்கியாகப் பேசியுள்ளார் புதிய அரசியல்வாதி கார்த்தி சிதம்பரம்.கல்யாண வயதுவரை வீட்டிற்குள்ளேயே இருந்துவிட்டுபொழுதைப் போக்க அரசியலில் ஈடுபட்டுள்ள இவர்தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகள் இந்தியாவை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் குறித்து பேசுவதில்லைஎல்லை தாண்டிப் பேசினால் ஒன்று நதிநீர்ப் பிரச்சினையாக இருக்கும் அல்லது இலங்கைப் பிரச்சினையாக இருக்கும் என்று உளறியுள்ளார். காஷ்மீர் பிரச்சினைபொருளாதார தாராளமயமாக்கல்உலக வங்கி பற்றியெல்லாம் பேசுவதில்லை என்று கார்த்தி குறைபட்டுள்ளார்.
மக்களின் வாழ்வுரிமைமாநிலத்தின் நிருவாக உரிமைகள்தமிழ் மொழி உரிமைசமூக நீதி,கல்வி உரிமை என இவைகள் தான் ஒரு மாநிலக் கட்சிக்கான முதன்மைத்திட்டங்களாக இருக்கமுடியும்.இவற்றை சரியாகவே திராவிட இயக்கம் செய்துள்ளது. இன்னும் சொல்லப்-போனால் இந்தக் கொள்கைக.ளில் பலவற்றை வட இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஆளும் காங்கிரசும்பா.ஜ.க வும் பின்பற்றியுள்ளன.
சமூக நீதி என்பது இந்தியாவிற்கே தேவைப்படும் கொள்கை. அதை அளித்தது தமிழகத்தின் திராவிட இயக்கம்தான். இப்படி இந்தியாவிற்கான கொள்கையை மட்டுமல்லஅண்டை நாடுகளுடனான உறவுகள்தேசிய நதிநீர்ப் பிரச்சினைஉலகப் பிரச்சனைகள் பற்றியெல்லாம் அண்ணா தொடங்கி கனிமொழி வரை பல திராவிட இயக்கத் தலைவர்கள் பல முறை இந்திய நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்கள். படிக்கும் பழக்கம் இருந்தால் கார்த்திஅண்ணாவின் நாடாளுமன்ற உரைத் தொகுப்பை படித்துப் பார்க்கட்டும்.
அதுமட்டுமல்ல மாநில சுயாட்சி என்ற கருத்தாக்கத்தை அளித்ததே தி.மு.க தான். கார்த்தி கூறும் காஷ்மீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண மாநில சுயாட்சியில் பதில் இருக்கிறது. அண்மையில் அணுக் கொள்கை மீதான சட்ட வரைவின் மீது கனிமொழி ஆற்றிய உரைகாஷ்மீர் சிக்கல் குறித்து கலைஞரின் கருத்துஅனைத்துக் கட்சிக் குழுவில் தி.மு.க.நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் பங்கேற்பு என இந்திய அரசியல் சிக்கல்களில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு என்றும் இருந்தே வந்துள்ளது. பத்திரிக்கையில் செய்தி வருவதற்காக கார்த்தி இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் பேசக்கூடாது.
அயோத்தியில் பாபர் மசூதியை இந்துத்துவாக்கள் இடித்தபோது வட இந்தியா பற்றி எரிந்ததுஆனால்தமிழகம் அமைதியாக இருந்ததே அதற்கு திராவிட இயக்கம் தானே காரணம்! கார்கில் போரின்போது அதிக நிதி அளித்தவன் தமிழன் அல்லவா!
தமிழர் என்ற அடையாளத்தைவிட இந்தியர் என்ற அடையாளம்தான் முக்கியமாம்இந்தியா செழித்தால் தான் தமிழகம் செழிக்குமாம்சொல்கிறார் கார்த்தி. முதலில் தமிழனை இந்தியனாக என்றாவது தேசியம் மதித்ததுண்டாமதித்திருந்தால் ஈழப்பிரச்சினையில் சிங்களவனுக்கு துணைபோயிருப்பார்களா?
காவேரிப் பிரச்சினைஎப்போதே தீர்ந்திருக்குமே! தமிழகம் போன்ற பல மாநிலங்களின் ஒன்றிணைவு தான் இந்தியா. தமிழகம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களும் செழித்தால்தான் இந்தியா செழிக்கும்.இந்தியா என்று ஒன்று தனியாக இல்லைஒரு முறை மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ்மாநிலத்திற்குத்தான் ஆள்வதற்கு மக்கள் இருக்கிறார்கள்;மத்திய அரசு ஆள்வதற்கு மக்கள் இல்லை என்றார்.
இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள எல்லா மக்களையும் இந்தியர்களாக மத்திய அரசு கருதியிருந்தால் மாநிலக் கட்சிகள் தோன்றியிருக்குமாசரி நாங்கள் பேசுவதெல்லாம் இருக்கட்டும். வெளியுறவுக்கொள்கைஉலகவங்கிபொருளாதார தாராளமயமாக்கல்காஷ்மீர் சிக்கல் போன்றவற்றை கடந்த 60 ஆண்டுகளாகக் கையாளுவது காங்கிரஸ்தானேஏன் இன்னும் இவை எல்லாம் சிக்கல்களாகவே நீடிக்கின்றனதீர்வு வந்தபாடில்லையே ஏன்பதில் சொல்வாரா கார்த்தி...