Sunday, February 27, 2011

சபரிமலையில் இருப்பது அய்யப்பனா?அய்யனாரா?



இந்தியாவைப் பொருத்தவரை பன்னாட்டு வியாபாரத்தைவிட படு ஜோராக நடப்பது பக்தி வியாபாரம்தான்.சுர்றுலா செல்வதுபோல அடிக்கடி கோயில்களுக்குக் கிளம்பி விடுவது இந்துப் பக்தப் பெருமக்களின் பொழுதுபோக்காகவே மாறிவிட்டது.இந்த மன நிலையைப் புரிந்து கொண்டுதான் இங்கே புதுப்புது சாமிகளும்,கோயில்களும் தோன்றிவருகின்றன. சாமியார்கள் ஒரு பக்கம் கல்லாக்கட்டுகின்றனர்.ஒரு காலகட்ட்த்தில் இப்படித் தோன்றிய ஒரு கோயில்தான் சபரிமலை அய்யப்பன்(?)கோயில்.கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள இந்தக் கோயிலுக்கு அந்த மாநில பக்தர்கள் அதிகம் செல்வதில்லை.(அவர்களுக்கு கோயிலின் ரகசியம் தெரியும் என்பதாலோ?) பெரும்பாலும் தமிழ்நாடு,ஆந்திரா ,கர்நாடகா பக்தர்களே இருமுடி கட்டி அய்யனை தரிசிக்கிறார்கள்(கவனிக்கவும் `அய்யன்’- இதுக்குப் பின்னாடி ஒரு கதை ஒளிஞ்சிருக்குங்க...).

ஆண்டுக்கு ஒருமுறை கார்த்திகை மாதம் செல்லவேண்டும் என்று தொடங்கி,இப்போது மகரஜோதி தரிசனம்,பிறகு விசு தரிசனம் என்று தொடர்ந்து கல்லா நிரம்புகிறது.கேரள அரசுக்கு பெரிய வருமானம் இல்லை என்பதால்,இந்த அய்யப்பன் கோயில் வருமானத்தை அங்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதனை ஊக்குவிக்கின்றன.கோயிலின் சுற்றுப்புறம் சுகாதாரம் இல்லாமல் இருப்பதை பலமுறை பக்தப் பெருமக்கள் உணர்ந்திருந்தாலும் பக்தி என்னவோ இன்னும் குறையவில்லை.மிக மோசமான குப்பைக் கழிவுகளும்,அசுத்தமடைந்த பம்பை ஆறும் மாலையிட்டு சுத்த பத்தமாக கோயிலுக்குச் செல்வோரை அசுத்தப்படுத்திவிடுகிறது.

இந்த சுகாதாரக் கேடுகள் இந்த ஆண்டு ஊடகங்களால் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டாலும் அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் அய்யப்ப பக்தர்கள் சொல்லும் குறை.ஆனாலும் கட்டி ஏறிக் கொண்டுள்ள பக்தர்கூட்டத்தால் நெரிசல் ஏற்படுவதும்,விபத்துகள் ஏற்படுவதும் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாகிப் போன நிலையில் இந்த ஆண்டு ஏற்பட்ட பெரும் விபத்து பல நாள் மோசடியை வெளிக்கொண்டு வந்துவிட்டது.


சபரிமலையில் 2011 ஜனவரி மாதம் 14ஆம் தேதி புல்லுமேடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில், மகர ஜோதியை தரிசித்து விட்டு ஊர் திரும்பிய அய்யப்ப பக்தர்கள் 110 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை கேரளா உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்தவிசாரணையின்போது உயர்நீதிமன்றம் துணிச்சலான சில கேள்விகளை முன் வைத்த்து.இவ்வளவு நாளும் பகுத்தறிவாளர்களால் கேட்கப்பட்ட அந்தக் கேள்வியை உயர்நீதி மன்றம் கேட்டது.(இப்படியெல்லாம் இந்தியாவில் எப்போதாவதுதான் கேட்கப்படும்)
மகரஜோதி என்பது தானாகத் தெரிவதல்ல,அது மனிதர்களால் ஏற்றப்படுவதுதான்,சபரிமலை தேவசம்போர்டே இந்தக் காரியத்தை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது என்பது பகுத்தறிவாளர்களின் ஆதாரபூர்வ குற்றச்சாட்டு.ஆனால்,இதற்கு இதுவரை நேர்மையாக எந்த பதிலையும் அய்யப்பன் வியாபாரிகள் சொன்னதில்லை.இந்நிலையில் இப்போது நடந்த விபத்து தொடர்பான விசாரணையில்

, பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? அல்லது வானத்தில் தோன்றும் நட்சத்திரமா? என்பதை திருவாங்கூர் தேவசம் போர்டு விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டுவிட்டது.நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டயத்தில் தள்ளப்பட்டதால்
 
திருவாங்கூர் தேவசம் போர்டு கூட்டம் அதன் தலைவர் எம்.ராஜகோபாலன் நாயர் தலைமை யில் ஜனவரி 31 அன்று நடந்தது. இதில் சபரிமலை அய்யப்பன் கோயில் மேல் சாந்தி கண்டரரு ராஜீவரருகன்னிபையூர் நாராயணன் நம்பூதிரி (வாஸ்து) மற்றும் பல உயர் பூசாரி கள், திருவாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், அய்யப்பன் கோவில் நிருவாகிகள், கட்டடக்கலை வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர்
நீண்ட நாட்களாக மறைத்து வைத்திருந்த அந்த ரகசியத்தை(?)உடைத்தே விட்டார்.
’’பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியை மனிதர்கள்தான் ஏற்றுகிறார்கள். இது எல்லோருக்கும் தெரியும். அதை திருவாங்கூர் தேவசம் போர்டும் அங்கீகரித்து உள்ளது. மகர ஜோதி ஏற்றப்படும் விஷயத்தில் இந்துக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது.

அந்த நம்பிக்கையில் தேவசம் போர்டு தலையிட விரும்பவில்லை. மனிதர்களால்தான் மகர ஜோதி ஏற்றப்படுகிறது என்று பிரசாரம் செய்யவும் தேவசம் போர்டு விரும்பவில்லை.

மகர ஜோதி பிரச்சினை பற்றி விவாதிக்க மட்டும் இன்றைய கூட்டம் கூட்டப்பட வில்லை. மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களான நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் அய்யப் பனைத் தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாகஉள்ளது.

ஆகவே கூட்ட நெரிசலைத் தவிர்க்க, வருடம் முழுவதும் கோவிலைத் திறந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கலாமா என்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வருடம் முழுவதும் கோவிலை திறந்து வைப் பது சம்பிரதாயத்துக் கும், வழக்கத்துக்கும் மாறானது. ஆகவே ஆண்டு முழுவதும் கோவிலைத் திறக்க வேண்டாம் என்று ஏக மனதாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதே போல், பக்தர் களின் நெரிசலைக் குறைப்பதற்காக புனிதமான 18-ஆம் படியை அகலப் படுத்தலாம் என்ற யோசனைக்கும் அனைத்து தரப்பினரும் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். புனித 18ஆம் படியை அகலப்படுத்துவது, கோவில் கட்டப்பட்ட ஆகம விதிக்கு விரோதமானது. அத்து டன் 18ஆம்படி சன்னி தானத்துடன் புனிதம் வாய்ந்ததும் ஆகும். ஆகவே 18ஆம் படியை அகலப்படுத்துவது சரியல்ல என்றும் கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டது’’. என்று தெரிவித்அவர், இந்த விவரங்களை பதில் மனுவாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மகரஜோதி என்பது அய்யப்பனின் அருளால் தானாக எரிவது என்று பரப்பித்தான் இவ்வளவுநாளும் கூட்டத்தைக் கூட்டியிருந்தனர்.அந்த தலபுராணத்தை நம்பித்தான் ஏராளமான பக்தர்களும் இருமுடி கட்டிக் கிளம்பிச்சென்றனர். ஜோதி தரிசனத்தைக் காணச்சென்ற பலர் நேராக பரலோகத்துக்கும் சென்றதுண்டு.சாலைவிபத்துகளாலும்,கூட்ட நெரிசலில் சிக்கியும் உயிரிழந்தவர்கள் ஏராளம். எதார்த்தம் இப்படி இருக்கையில் மகரஜோதி மனிதர்களால்தான் ஏற்றப்படுகிறது என்று இப்போது தேவசம் போர்டு சொல்கிறது.அப்படியானால் இவ்வளவு காலமும் பக்தர்களை அது ஏமாற்றியிருக்கிறது.இந்தப் பொய்யை நம்பிச் சென்ற பக்தர்களிடம் அது மன்னிப்புக் கேட்கவேண்டாமா?இனிமேலாவது மகரஜோதி ஏற்றப்படமாடாது என்று அறிவிக்குமா?
கடவுளும் கோயில்களும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் முயற்சி என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா? மகரஜோதி கட்டுக்கதை இப்போது வெளிவந்து நீண்ட நாட்களாக பகுத்தறிவாளர்கள் சொல்லிவந்ததுதான் உண்மை என்பதை வேறு வழியில்லாமல் சபரிமலை தேவசம் போர்டும் உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டிய அவசியம் வந்துவிட்டது.
இதேபோல அய்யப்பன் கடவுளுக்கும் அந்தக்கோயிலுக்கும் சொல்லப்படும் வரலாறும் பொய்யானது என்பதை பகுத்தறிவாளர்கள் சொல்லிவருகிறார்கள்.பகுத்தறிவாளர்கள் மட்டுமல்லாமல் இந்து மத வேத புராணங்களில் வல்லவரான ஒருவரும் அய்யப்பனின் வரலாறைப் புட்டுப்புட்டு வைத்துள்ளார்.  
மகர ஜோதி தோன்றிய வரலாற்றையும்,அய்யப்பன் யார் என்பதையும் அவர் விளக்கியிருக்கிறார்.அந்த மனிதர் வேத விற்பன்னரான அமரர் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.இவர் எழுதிய இந்துமதம் எங்கே போகிறது?’ என்ற நூலில் (நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு) சில பகுதிகளை நமது உண்மை வாசகர்களுக்காகத் தருகிறோம்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்றைய மலையாள தேசத்தில் இருக்கும் மலைக்கிராமம். அங்கே கொள்ளையடிக்க வந்த மிலேச்ச சிப்பாய்கள் சற்றே நிமிர்ந்தனர். சுற்றிலும் 5 குன்றுகள் அழகழகாய் இருந்தன. கஷ்டப்பட்டு மேலே ஏறினார்கள். காந்தமலை என்ற அந்தக் குன்றை அடைந்த அந்த சிப்பாய்களின் கண்கள் கூசின. தங்கச்சிலை தகதகவென மின்னிய தங்கச் சிலையை அடித்தார்கள் கொள்ளை.
தாங்கள் வழிபட்ட சிலை களவாடப்பட்டதைக் கண்ட மலை மக்கள் அங்கிருந்து காந்தலையிலிருந்த சற்றே இறங்கி வந்தனர். 5 குன்றுகளுக்கும் நடுப்பட்ட அந்த ஸ்தலத்தில் இன்னொரு சிலையை உருவாக்கினார்கள். கிராமத்து தெய்வமாக விளங்கியது அய்யனார்.
அய்யனாரை அமர வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். முதலில் பொன் விக்ரகம் இருந்த இடம்தான் பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது. அந்த மக்களின் சிலைதான் இன்று ஜோராக ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
இன்று சிலர் வருஷத்துக்கு சில நாட்கள் மட்டுமே அந்தச் சிலையைத் திறந்து தங்கள் வசம் வழிபாட்டு லகானை வைத்திருக்கிறார்கள்.
அந்த மலைதேசத்துக்கு, இப்போது ஆந்திரப்பிரதேசமாக இருக்கிறதே... அந்தப் பக்கத்திலிருந்து ஒரு கூட்டம் பிழைப்புக்காக தனியாய் நடந்து வந்தது.
அப்போதுதான் இந்த அய்யனாரையும் மலைமக்களையும் பார்த்தார்கள். அது ராத்திரி நேரம் மலைமக்கள் ஒரு கையில் தீப்பந்தத்தையும் மறுகையில் மாம்ஸத்தையும் வைத்திருந்தார்கள். அய்யனாருக்கு எதிரே தீப்பந்தத்தைக் கொளுத்தி வைத்துவிட்டுவேட்டையாட்டி வந்த உடல்களை அய்யனாருக்குப் படைக்க ஆரம்பித்தார்கள்.
இன்றைய ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வந்தேறிய நம்பூதிரிகள் தங்கள் பூணூலை முறுக்கிக்கொண்டு இக்காட்சியைப் பார்த்தனர். தீவிர வைதீகர்களான நம்பூதிரிகள்இந்த அய்யனார் வழிபாட்டை கொஞ்சநாள் கவனித்தபடியே இருந்தார்கள்.
திடீரென ஒருநாள்புது ஐதீகத்தைக் கிளப்பினார்கள்.
இது உங்க அய்யனார் இல்லப்பாஎங்க அய்யப்பன். இவன் இங்க வந்த கதை உங்களுக்குத் தெரியாதா?
தெரியுமே! ரெண்டு மூணு தடவ உடைச்சிட்டாங்க. அப்புறம் நாங்களே கஷ்டப்பட்டு இந்தச் சிலையைச் செஞ்சோம். காவலுக்கு வச்சிருக்கோம்.இதுதான் மலைமக்களின் பதில்.
நம்பூதிரிகளாக வந்த பிராமணர்கள் பதில் சொன்னார்கள். தப்புதப்பு.. இவன் எப்படி இங்கே வந்தான்னு பெரிய ஐதீகமே இருக்கு.என்றபடி சிவனுக்கும் திருமாலுக்கும் அய்யப்பன் பிறந்த கதையை ஆரம்பித்தார்கள்.
அய்யப்பன் பிறந்த கதையை நம்பூதிரிகள் மலைவாசிகளிடம் சொல்ல... மலைமக்கள் திகைத்துவிட்டார்கள்.
அப்படியா? எங்கள் அய்யனார் இப்படியா பிறந்தார்?” என்றார்கள்.
ஆமாம்... அய்யப்பனை இதுபோல நீங்கள் வழிபடக் கூடாது. அய்யப்பனை வழிபடும் வேலையை எங்களிடம் விட்டுவிடுங்கள்.
நம்பூதிரிகள் சென்ன புராணக் கதைகளை மெல்ல மெல்ல நம்ப ஆரம்பித்தார்கள் மலைமக்கள்.
மலைப்பகுதியில் இருந்த தங்கள் அய்யனாரை அருகே சென்று பூக்கள் போட... சில படிகளைக் கட்டி வைத்திருந்தார்கள் மலைவாசிகள். இதைப் பார்த்த நம்பூதிரிகள்...
இந்த 18 படிகளில்... நீங்கள் இனிமேல் சாதாரணமாக ஏறமுடியாது. விரதம் இருந்து... சும்மா இல்லை ஒரு மண்டலம் விரதம் இருந்து... மாம்ஸம் விலக்கி... சுத்தமாக இருந்தால்தான் இங்கே ஏறமுடியும். என்ன புரிகிறதா?” என்றார்கள்.
இப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாய்... நாளடைவில் அந்த மலைப்பகுதியின் அய்யனார்... நம்பூதிரிகளால் மணிகண்டனாகவும் அய்யப்பனாகவும் மாறினார்.
மலைமக்கள் படிகளின் கீழே நின்றனர். பிராமணர்கள் மேலே சென்றனர். மேலே சென்றவர்களின் கண்களில்... திகு திகுவென ஒரு ஜோதிப் பிரகாசம் ஜொலித்தது.
என்ன அது?” ஆச்சரியமாய்க் கேட்டனர்.
மலைமக்களோ அதைப் பார்த்துச் சிரித்தனர்.
நாங்கள் ஆச்சர்யப்படுகிறோம். பயப்படுகிறோம், பெரிதாக எரிகிறதே என்று. நீங்கள் எவ்வித முகபாவமும் காட்டாமல் இருக்கிறீர்களே!
மறுபடியும் கேட்டார்கள் பிராமண நம்பூதிரிகள்.
அதுவாநீங்கள் எங்களைப் பார்த்தபோது அன்று ராத்திரி நேரம்நாங்கள் தீப்பந்தம் கொளுத்தி வைத்திருந்தோமேகவனித்தீர்களா?”
ஆமாம்…”
இன்று எங்கள் திருவிழா. நாங்கள் தீப்பந்தத்தைக் கொளுத்தி திருவிழா கொண்டாடுகிறோம். அதுதான் அந்த காந்த மலைமேல் ஜொலிக்கிறதுஎன்றார்கள் மலைவாசிகள்.
கொஞ்ச நாள் ஆனது. மலைமக்களின் தீப்பந்தத் திருவிழாவைத் தங்களது திருவிழாவாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தனர். அட, அசடுகளேஅது உங்களின் திருவிழா மட்டுமல்ல.. அய்யப்பனுக்கு சபரி என்னும் காட்டுவாசி பக்தை இருந்தாள். அவளுக்கு மோட்சம் தந்தார் அய்யப்பன். புஷ்ப மரங்கள் பூக்களை இறைக்கதேவர்கள் எல்லாம் வந்திருந்து வாழ்த்தஒரு ஜோதி பெரிய அளவில் தோன்றியது. அதிலே சபரி கலந்து மோட்சம் அடைந்தாள். அந்த மோட்ச ஜோதி அது.
நீங்கள் அதன்பிறகு திருவிழாவை ஆரம்பித்திருக்கிறீர்கள். புரிகிறதா? இந்த மலைப் பகுதிக்குக் கூட சபரிமலை என்று பெயர். இப்படித்தான் பெயர் வந்ததுஎன்று தீப்பந்தத் திருவிழாவுக்குப் புது வெளிச்சத்தைகொடுத்தார்கள்.
தை மாதம் மகர நட்சத்திரத்தில்இன்றும் அந்த காந்த மலை மேலே ஒரு ஜோதி தெரிகிறது. திடுதிப்பென மறைகிறது. இப்போதும் மலைமக்கள் தீப்பந்தத் திருவிழா கொண்டாடுகிறார்களா? இல்லையோ? பிறகெப்படி…?
நம்பூதிரிகளின் ரகசிய ஏற்பாடு. அங்கே தீமூட்டி வருவார்கள். இதுபற்றி பிரபல்யமான கேரளத் தலைவர்கள் பலருமே சொல்லியிருக்கிறார்கள். மகரஜோதி என்பது மலைமக்கள் ஜோதி. அதை இப்போது நம்பூதிரிகள்தான் ஏற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
- இதுதான் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அய்யப்பன் குரித்தும் மகரஜோதி குறித்தும்  கூறியுள்ள அசைக்கமுடியாத செய்தி. இதுவரை இந்த வரலாற்றுச்  செய்திக்கு இந்துத்துவவாதிகள் எவராலும் பதில் சொல்லமுடியவில்லை.
அவர்களால் நேர்மையான பதிலைச் சொல்லமுடியாது.ஏனென்றால் இந்த வரலாறுதான் அய்யப்பன் பற்றிய உணமையான வரலாறு.இன்னொரு கதையை வேண்டுமானால் அவர்களால் கட்டிவிட முடியும்.ஆனால்,அதுவும் மகரஜோதி போல சில ஆண்டுகளில் புஸ்...ஆகிவிடும்.அறிவியல் வளர்ச்சியைத் தடுத்தல் ஒழிய கடவுள் ஒழிவதைத் தடுக்க முடியாது என்றார் பெரியார்.அறிவியலும் பகுத்தறிவு எண்ணமும் வளர வளர கடவுளின் பெயரால் செய்யப்படும் மோசடிகள் சுக்குநூறாகிப்போகும்.மகரஜோதி ரகசியத்தை இப்போது ஒப்புக்கொண்ட சபரிமலை வியாபார நிறுவனமான தேவசம் போர்டு அய்யப்பனின் உணமைக்கதையை ஒப்ப்ய்க்கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை.