Sunday, July 31, 2011

குதிப்பதுதான் குண்டலினியா?



திருவண்ணாமலை ராஜசேகரன் என்ற ஒரு இளைஞன்.சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி காவிகளுடன் அலைந்து திரிந்தான்.அந்தக் காவிகளின் எல்லாப் பழக்கங்களும் தொற்றிக்கொண்டு,நான் தான் ரமணரின் அவதாரம் என்று கூறிக்கொண்டு நித்யானந்தா என்று புதுப்பெயர் சூடிக்கோண்டான்;ஆசிரமம் அமைத்தான்.சாமியார் தொழில்தான் எப்போதும் நல்லாக் கல்லாக் கட்டும் தொழில் ஆயிற்றே.கல்லாப் பெட்டி நிரம்பியது.பக்தி வியாபாரம் படு ஜோர்.காலத்திற்குத் தகுந்தவாறு நவீனத் தொழில் நுட்பங்களைக் கையாண்டு பக்த கோடிகளைச் சேர்த்துக் கொண்டார்.பேச்சில் வல்லவாரகப் பேசப்பட்டார்.அப்படிப் பேச இவரே பணம் கொடுத்து பலரையும் கிளப்பிவிட்டார்.புத்தகங்கள் போட்டார்.பல எழுத்து வியாபாரிகள் பணம் பெற்றுக்கொண்டு எழுதிக் கொடுத்ததையெல்லாம் இவரது பெயரிலேயே வெளியிட்டுக் கொண்டார்.கதவைத் திறகாற்று வரும் என்று முன்னணி ஏட்டில் தொடரும் வந்தது.

உடல் உழைப்பில்லாதவர்கள்,மனம் சோர்ந்தவர்கள்,குடும்பத்தோடு,குழந்தைகளோடு வீட்டில் அளவலாதவர்கள்,தனிமையில் இருப்பவர்கள்,கணவனை அல்லது மனைவியை விட்டுப் பிரிந்தவர்கள்,முதியவர்கள் என வாழ்க்கையை ரசிக்கத்தெரியாத ரகத்தினர்,சமூகச் சிந்தனை இல்லாதவர்கள் இந்த மாதிரிச் சாமியார்களைச் சரணடைவதுதான் சில ஆண்டுகளாக ஒரு பேஷன்.அந்த பேஷன் இந்தச் சாமியாருக்கும் கை கொடுக்க கூட்டம் கூடியது.பணமும் சேர்ந்தது.கீதா உபதேசத்திலிருந்து பிரம்மச் சரியம் வரை வாய் கிழியப் பேசுவது நித்யானந்தாவின் சிறப்பு.கூடவே தியானம்,யோகம் போன்ற எளிதான உடற்பயிற்சிகளும் சொல்லித்தரப்பட்டன.ஊர் ஊருக்கு அமைப்புகள் உருவாயின.உபதேசங்களுக்குப் பயணமும் சென்றார்.சகல வசதிகளுடன் வாழ்க்கை முறை அமைந்தது.மனிதனின் உடல் தேவையும் ஏற்பட்டது சாமியாருக்கு.

ஒரு மார்க்கெட் இழந்த நடிகை ஆசிரமத்தில் அடைக்கலமானார்.அவரே சாமியாருக்குப் பணிவிடைகள் செய்தார்.இது நித்யானந்தாவே  சொல்லிய வாக்குமூலம்.ஆசிரமத்துக்குள் சிக்கல் உருவாக சாமியாரின் அந்தரங்கம் சி.டி.பதிவாகி இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக ஒளிபரப்பானது.நக்கீரன் பத்திரிக்கையில் நித்யானந்தாவின் உண்மை முகத்தை அவரது சீடர் லெனின் கருப்பன் என்ற தர்மானந்தா வெளிக்கொணர்ந்தார்.
ஒரு ஆணுக்கு ஒரு பெண் துணை தேவைதான்.அதனை உலகம் ஏற்றுக்கொள்ளும்.ஆனால்,பிரமச்சரியம் பற்றிப் பேசியவர் அப்படி இருக்கலாமா என இந்து மதத்தினரே கேள்வி எழுப்பினர்.நித்யான்ந்தா மீது பாலியல் குற்றச் சாட்டுகள் எழ இவரது பிட்தி ஆசிரமம் கர்நாடகாவில் இருப்பதால் வழக்குப்பதிவானது.சில நாள் வட மாநிலங்களில் ஓடி ஒழிந்து பின் கைது செய்யப்பட்டு சாமியார் கம்பி எண்ணினார்.அவருடன் இருந்த நடிகை ரஞ்சிதாவோ தலைமறைவானார். வழக்கில் ஜாமீன் பெற்று ஆசிரம் திரும்பியவருக்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தைரியம் இங்கு பேட்டி கொடுக்கும் அளவுக்கு வந்தது.

கடந்த ஜீலை 13 அன்று எல்லா பத்திரிகையளர்களையும் அழைத்து தனது தரப்பு கருத்துகளைச் சொல்லிய நித்யான்ந்தா அந்த சி.டி.யில் இருப்பது நான் இல்லை;அது முழுக்க போலியானது;என்னிடம் பணம் பெற பேரம் பேசப்பட்டது;இதையெல்லாம் காவல்துறையிடம் புகாராக அளித்துள்ளேன் என்று கூறினார்.இவ்வளவு பேசியவர் நமது உண்மை நிருபரின் எந்தக் கேள்விக்கும் விடை அளிக்கவில்லை.இன்னும் சிலர் கேட்ட தனது சொத்து விவரம் குறித்த கேள்விக்கும் விடை சொல்லவில்லை.ஆதராத்தை தருகிறேன் என்று கூறியவர் அதனைத் தராமலேயே பேட்டியை முடித்தார்.(பேட்டி முழு விவரம் பெரியார் வலைக்காட்சியில் காணலாம்: http://viduthalai.in/new/videos.html)

நித்யனந்தா ரஞ்சிதாவுடன் உள்ள வீடியோவை உலகமே பார்த்துவிட்டது.youtube இணையத்தளத்தில் ஒரு பகுதியை மட்டுமே பல லட்சம் பேர் பார்த்துள்ளனர்.டெல்லியில் உள்ள ஆய்வு மையம் அந்த வீடியோவில் இருப்பது நித்யானதாவும் ரஞ்சிதாவும்தான் என்று சான்றிதழும் அளித்துவிட்டது. ஆனால்,அப்பட்டமாகப் பொய் கூறும் இவர், இழந்த மதிப்பை மரியாதையைத் திரும்ப மீட்க குண்டலினி யோகம் செய்யப்போவதாக அந்தப் பேட்டியின் போது கூறினார்.  அதன்படியே ஜூலை 15 அன்று அந்த நாடகத்தை தனது பிடதி ஆசிரமத்தில் அரங்கேற்றினர்.

பக்தர்களைக் கூட்டிவைத்துக் கொண்டு குண்டலினி யாகம் என்று கூறி மந்திரங்கள் ஜெபித்து கையை உயர்த்தி சைகை காட்டினார்.ஏற்கெனவே பயிற்றுவிக்கப்பட்ட சிலர் கால்களை மடக்கி உட்கார்ந்தவாறே குதித்தனர்.தவளை போலத் தவ்வினார்கள்.இதுதான் குண்டலினி சக்தி என்பதுபோல நித்தியானந்தாவும் சிரித்தபடியே உஷ்..உஷ்..என்றார்.ஆனால்,சர்வ சக்தி உள்ளதாகவும்,த்மக்கு எல்லா யோகாசனங்களும் தெரியும் என்று புற்று நோயையே குணப்படுத்தும் ஆற்றல் பெற்ற வித்தைகள் தெரியும் என்று பேட்டியி பீற்றிக்கொண்ட நித்தியானந்தா குண்டலினியைச் செய்துகாட்டவில்லை.குறைந்தபட்சம் அந்த பக்தர்கள் குதித்ததுபோலக் கூடக் குதிக்கவில்லை.சிறிது நேரம் குதித்த அந்தபக்தர்கள் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டனர்.

இந்த நிகழ்ச்சியை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க அமெரிக்காவில் இருந்தும் டெல்லியில் இருந்தும் பெங்களூருவில் இருந்தும் ஆய்வு நிறுவன்ங்கள் வர இருக்கின்றன.அவர்களின் முன்னிலையிலும்,பத்திரிகையாளர்களின் முன்னிலையிலும் செய்துகாட்டப்போவதாகச் சொன்னார்.எந்த நிறுவனத்தினரும் வந்த்தாகத் தெரியவில்லை.அந்த தகவலை நித்தியான்ந்தா தரப்பும் அறிவிக்கவில்லை.ஆனால்,அந்த நிகழ்ச்சிக்கு சில பத்திரிகையாளர்கள் சென்றிருந்தனர்.இவர்களில் கர்நாடகாவைச் சேர்ந்த கிரண் என்ற பத்திரிகையாளரும் ஒருவர். இவர் அங்கு என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார்.
கடந்த 15ம் தேதி குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்துக்கு செய்தி சேகரிக்க சென்றேன். அப்போது, நித்தியானந்தா, குண்டலினி யாகம் நடத்தினார். அதில், மனிதனுக்குள் தெய்வீக சக்தியை வரவழைத்து ஒரு அடி உயரம் அந்தரத்தில் பறக்க வைக்க முடியும் என அறிவித்தார். இதை யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்றார். நானும் முயற்சி செய்தேன். எதுவும் நடக்கவில்லை.
உடனே அவரிடம், எனக்கு பறப்பது போன்று எந்த உணர்வும் ஏற்படவில்லை. நீங்கள் மக்களை ஏமாற்றுகிறீர்கள். அதற்காக, ஆட்களை நியமித்து நாடகம் நடத்துகிறீர்களா, கம்ப்யூட்டர் யுகத்தில் இது சாத்தியம் இல்லாதது என்றேன். அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். எனது உடல் அமைப்புதான் இளைஞனை போன்றது. உணர்வுகள் 6 வயது சிறுவனை போன்றது. எனவே, எனது சக்தி அபிரிமிதமானது என்று சம்பந்தம் இல்லாமல் எதைஎதையோ பேசினார். இது குறித்து ரஞ்சிதாவிடமும் கேட்டேன். ஆனால், அவர் மழுப்பலாக சிரித்தார். எனது இந்த அனுபவத்தின் மூலம், நித்தியானந்தா போலி சாமியார் என்பதை தெரிந்து கொண்டேன். குண்டலினி யோகா என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார். பிடதியில் விவசாயம் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தில், அவர் ஆசிரமம் அமைத்து மக்களை ஏமாற்றி வருகிறார். இது குறித்து அரசுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இனி மேலாவது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

யோகாசங்களில் பல வகை உண்டு.அதில் குண்டலினி யோகாசனமும் ஒன்று என்று ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாகச் செய்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஏனென்றால் நித்யானந்தா சொல்வதுபோல புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உடலை சில அடிகள் உயர்த்தி அந்தரத்தில் பறப்பதுதான் குண்டலினி.இது சாத்தியமா என்பதே அந்தக் கேள்வி ?யோகாசன வகுப்பு நடத்துபவர்களும் இதுவரை இப்படிச் செய்து காட்டியதில்லை.அதுவே முழு வேலையாக இருப்பவர்களுக்கே இன்னும் சாத்தியப்பாடாதபோது இந்த மோசடிப்பேர்வழிக்கு எப்படி சாத்தியப்படும் என்று பகுத்தறிவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
காவி அணிந்து கொண்டு ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருந்து வெட்டவெளிச்சமான ஒரு ஆபாசக்கூத்தை கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி ஒருவரால் வெளிப்படையாக வந்து போலியாக மறுக்கமுடிகிறது என்றால் மக்கள் எவ்வளவு மடையர்களாக இருக்கிறார்கள் என்றல்லாவா நினைத்துக் கொண்டிருக்கவேண்டும்? இதுவே காவி அணியாத வேறு ஒரு துறையச் சேர்ந்தவராக இருந்தால் இப்படிப் பேசியிருக்க முடியுமா?வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பேட்டி கொடுக்கமுடியுமா?இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் இந்தக் காலிகள் ஏமாற்றுவார்கள்?

Saturday, July 16, 2011

கருப்புப் பணம் எங்கே இருக்கிறது?


இந்தியா ஒரு ஏழை நாடு என்று நீண்ட நாட்களாகச் சொல்லப்படுகிறது.இனிமேல் அப்படிச் சொல்லாதீர்கள்.வேண்டுமானால் இப்படிச் சொல்லிக் கொள்ளுங்கள்.இந்தியா ஏழைகள் அதிகம் வாழும் பணக்கார நாடு”.
பணக்காரர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால்,அதே நேரம் ஏழைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.இங்கே பரம்பரை பணக்காரர்கள் மட்டுமல்ல,புதிய தொழில் அதிபர்கள்,சாமியார்கள்,அரசியல்வாதிகள்;ஏன் சாமிகளும்கூட பணக்காரர்கள்தான்.பின் எப்படி இது ஏழை நாடு.எனவேதான் சொல்லுங்கள் இந்தியா ஏழைகள் வாழும் பணக்கார நாடு.
எல்லோரும் ஒருவரே என்ற சரிநிகர் சமமான நிலையை எட்டவேண்டும் என்பது குறித்துக் கவலைப்பாடாதவர்கள்,கல்வி,வேலை வாய்ப்பில் சமூகநீதி கிடைக்கவேண்டும் என்பது அக்கற கொள்ளாதவர்கள்,சமூகத்தில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் ஜாதி,மத பேதம் ஒழிந்து எல்லோரும் சமத்துமாக வாழ  போராடாதவர்கள்,பொருளாதாரச் சமநிலை எய்திட உழைக்காதவர்கள் இவை குறித்தெல்லாம் வாய் திறக்காதவர்கள் இப்போது புதிதாய் கிளம்பியிருக்கிறார்கள்.கருப்புப்பணத்தைக் கண்டுபிடியுங்கள்;அது சுவிஸ் வங்கியில் இருந்தாலும் கொண்டுவாருங்கள் என்கிறார்கள்.நல்ல முழக்கம் தான் வரவேற்போம்.ஆனால்,சுவிஸ் வங்கியை விட அதிகமான பணம் இந்தியாவிலேயே இருக்கிறதே,அது தெரியாதா இவர்களுக்கு?
இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஜூலை 7 அன்று ஒரு கோவிலுக்குச் சென்று வழிபட்ட படங்கள் பத்திரிகைகளில் வந்துள்ளன.அவர் தொட்டு வணங்குவது தங்கத்தகடுகளால் ஆன கோவில் சுவரை.அந்தக் கோவில் திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோயில்.இவர் மட்டுமல்ல,ஏறக்குறைய இந்திய அரசியல்வாதிகள் பெரும்பகுதியினர் வெங்கடாஜலபதியைப் போல பணக்கார சாமிகள் குடிகொண்டிருக்கும் கோவில்களுக்குச் செல்லும் வழக்கம் உள்ளவர்கள்தான்.இவர்கள்தான் சட்டமன்றங்களில்,நாடளுமன்றங்களில் வறுமையைப் போக்க(?) திட்டம் தீட்டுகிறார்கள்.அந்தத் திட்டங்களில் வரிவசூல் பணங்களும்,வெளிநாட்டுக் கடன்களும்,நிதி உதவிகளும் மட்டுமே இடம்பெறும்.இவர்கள் சென்று வரும் கோவில்களில் உள்ள பணமும் நகையும் இந்த்த் திட்டங்களைத் தீட்டும் போது நினைவில் வராது.
இந்தியாவில் 5 லட்சத்து 74 ஆயிரம் பெரிய கோவில்கள்,2 இலட்சம் நடுத்தரக் கோவில்கள் உள்ளன.இவற்றில் 12 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் தங்கம் இருக்கிறதாம்.ஆண்டுக்கு 12 இலட்சத்து ஓராயிரம் கோடி ரூபாய் தட்சணையாக மட்டும் வருகிறது.இது ஒரு தோராயக் கணக்குதான்.இன்னும் முழுமையாக கோவில்கள் கணக்கெடுப்பு நடைபெறவில்லை.நடந்தால் கணக்கு எங்கேயோ போகலாம்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் ஒரு பாடல்தான் நினைவுக்கு வருகிறது.பகுத்தறிவுக்கவிராயர் உடுமலை நாராயணகவி எழுதிய அந்தப் பாடலில் கலைவாணர் இப்படிப்பாடுவார்..
எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்;
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தெடுவேன்;
சாமிகள் அடிகளில் சரண் புகுந்தாயோ?
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ?  
அவர் பாடியது போலத்தான் இந்தியாவில் சாமிகளின் அடிகளிலும்,சந்நியாசிகளிடமும் பணம் குவிந்திருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.
அண்மையில் திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவிலில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது.ஒரு கோவிலிலேயே ஒரு லட்சம் கோடி என்றால் இந்தியா முழுதும் உள்ள கோவில்களில் எத்தனைக் கோடிக் கோடிகள் இருக்கும்?இது யாருடைய சொத்து?இது ஏன் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது?இந்தக் கேள்விகளை ஏன் அரசியல்வாதிகளோ,திடீர் அவதாரப் புருஷர்களான ஊழல் ஒழிப்பு உத்தமர்களோ எழுப்புவதில்லை?
இவர்கள் மட்டுமல்ல அடிக்கடி பீதி கிளப்பும் ஊடகங்களும் இதனைக் கண்டுகொள்வதில்லை.செய்திகள் அடிபடும் போது அதை யும் ஒரு செய்தியாகக் காட்டிவிட்டு அப்படியே விட்டுவிடுகிறார்கள்.தங்களுக்கு வேண்டாத அரசியல்வாதிகள் ஏதேனும் சட்ட்த்துக்கு முரணான காரியங்களில் ஈடுபட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராகக் குதித்து உலக நியாயம் பேசும் இந்த ஊடகங்கள் கோவிலில் குவிந்திருக்கும் பல லட்சம் கோடிகளைப் பற்றி வாய்திறப்பதில்லை.
எங்காவது கிராமங்களில் பழைய வீடுகளைத் தோண்டும்போதோ,ஏரி,குளங்கள் தூர்வாரும் போதோ,வயல்வெளிலோ புதையல் கிடைத்தால் அரசு என்ன சொல்கிறது.இந்தப் புதையல் அரசாங்கத்திற்குச் சொந்தம் என்றுதானே சொல்கிறது!பழைய அய்ம்பொன் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டால் அதனை தொல்லியல் துறையினர் உடனே எடுத்துச் சென்று பொருட்காட்சியில் வைத்து அதனை அரசின் சொத்து ஆக்கிவிடுகிறார்கள் அல்லவா?
ஏழைகள் வாழும் கிராமங்களில்,நடுத்தர மக்கள் வாழும் நகரங்களில் மன்ணுக்கு அடியில் கிடைக்கும் புதையல்களும்,பொன்னும்பொருளும் அரசுக்குச் சொந்தம்;ஆனால்,பணக்கார சாமிகள் இருக்கும் கோவில்களில் உள்ள பொன்னும் பொருளும் அரசுக்குச் சொந்தமில்லையா?
திருப்பதியில் பணக்காரகளால் கொட்டப்படும் பணமும் தங்கமும் சென்ற நூற்றாண்டிலும்,இந்த நூற்றாண்டிலும் வரி ஏய்ப்பு செய்து பாவம் போக்க புண்ணியம் தேடி இந்தியப் பணக்காரர்களால் அளிக்கப்பட்டவை.பத்மனாபசாமி கோவிலில் உள்ள நகைகள் கடந்த 17 ஆம் நூற்றாண்டில் ஆண்ட மன்னர்களின் ஏக போகத்தால் மக்களை வதைத்து அடிமைகளாக நட்த்தப்பட்டு அடக்கி ஆண்டு அடித்த கொள்ளை.இந்த நகைகளும் பொற்காசுகளும் வானத்தில் இருந்து விழுந்துவிடவில்லை.மன்னருக்கு மக்கள் கட்டிய வரிப்பணத்தில் இருந்தும் ஆலயத்துக்கு மக்கள் அளித்த நன்கொடைகளில் இருந்தும்தான் உருவாக்கப்பட்டவை.எனவே,மன்னர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தப் பணத்தை மக்கள் நலத்திற்குத்தான் பயன்படுத்தவேண்டும்என்று ஏராளமான கடிதங்கள் கேரளாவின் காசர்கோடு பகுதியில் இருந்து கேரள அரசின் தலைமைச் செயலகத்திற்கு குவிந்தவண்ணம் உல்லதாம்.
நாடு சுதந்திரம் பெற்றபோது  மன்னர்கள் ஒழிக்கப்பட்டு அவர்களது சொத்துகள் அரசின் நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்டன.மன்னர் மானியம்கூட ஒழிக்கப்பட்டுவிட்டது.அப்படி இருக்கையில் பழங்கோவில்களில் உள்ள கணக்கில் அடங்கா நகைகளும் அரசின் சொத்துதானே!
பத்மனாப சாமி கோவில் புதையல் வெளிவரத்துவங்கியவுடன் நாட்டின் பல கோவில்களில் உள்ள புதையல்கள் பற்றிய செய்திகள் வரத்தொடங்கிவிட்டன.
ஆசியாவிலேயே மிகப்பெரிய ராஜகோபுரத்தை கொண்ட சிறீரங்கம் ரெங்கநாதர் கோவிலிலும் தங்க புதையல் இருப்பதாக சிறீரங்கத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கிருஷ்ணமாச்சாரியார் தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு மனு அனுப்பி உள்ளார்.
அதில்,சிறீரங்கம் கோவில் கி.பி.1736ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 48 வரு டங்களாக ஆபத்துகளை சந்தித் தது. 1755ஆம் ஆண்டு பிரெஞ்சு படையினர் சிறீரங்கம் கோவிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள், பொற்காசுகள் இருந்த சிறீபண் டாரத்தை கொள்ளையடிப்பதற் காக வந்தனர். இந்த சம்பவம் நாள் குறிப்பில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
எனவே இந்த குறிப்புகள் மூலம் படையெடுப்பின் போது சிறீரங்கம் கோவிலில் ஆவிநாடன், திருச்சுற்றில் உள்ள கருடன் சன்னதிக்கு பின்புறம் அந்த ஆபரணங்களையும், பொற் காசுகளையும் அப்போதைய ஸ்தல தாரர்கள் (கோவில் நிருவாகத்தினர்) பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என சந்தேகம் ஏற்படுகிறது.
இப்போது உள்ள நவீன கருவி கள் மூலம் கருடன் சன்னதிக்கு எந்த வித சேதமும் ஏற்படாமல் சோதனை நடத்தி அந்த புதையல் பற்றி தெரிந்து கொள்ளலாம். எனவே இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
என்று குறிப்பிட்டுள்ளார்.
திருவாரூர் கோவிலிலும் புதையல் இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம் கூறுகிறார்.
கோவில்களில் குடிகொண்டிருக்கும் சாமிகளெல்லாம் கோடீஸ்வரகளாக இருக்கும் நிலையில்,அவர்களைக் கும்பிடும் ஆசாமிகள் கோவணாண்டிகளாக இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
கருப்புப்பணம் என்று அரசு எதைச் சொல்கிறது?அரசின் வருமான வரிக்கணக்கில் வராத பணம்தான் கருப்புப்பணம்.அப்படியானால் இந்தக் கோவில்களில் உள்ள பணமும்,நகைகளும் மட்டுமல்லாமல் சாய்பாபா போன்ற சாமியார்களின் அறைகளில் உள்ள பணமும் அரசின் வருமானவரிக் கணக்கில் வராதவைதான். அரசின் பார்வை சுவிஸ் வங்கியின் மீது மட்டும் அல்லாமல் இந்தப் பக்கமும் திரும்பவேண்டும்.மீடியாக்களும் கருப்பணத்தைக் கைப்பற்றப் புறப்பட்டிருக்கும் புதிய ஊழல் ஒழிப்பு உத்தமர்களும் இந்தக் கோவில்களின் மீதும் கொஞ்சம்  கடைக் கண் பார்வையை வீசட்டும்.
உலகப் பொருளாதார மந்தம்,நாட்டின் பணவீக்கம்,மக்கள் நலம் மற்றும் அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களுக்கான பணத்தேவை உள்ளிட்ட பொருளாதாரச் சிக்கல்களைக் களையவும்,வறுமை ஒழிப்புத்திட்டங்களுக்கும் பணத்தைத்தேடி இந்தியா எங்கேயும் அலையவேண்டாம்;எந்த நாட்டிடமும் கையேந்தவேண்டாம்;பன்னாட்டு நிதி நிறுவனத்திடமும் மண்டியிடவேண்டாம்.நம் நாட்டில் உள்ள கோவில்களிலும்,சாமியார்களின் மடங்களிலும் புகுந்தால் போதும்.


திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவிலில் இதுவரை கிடைத்துள்ள நகைகள்
  • தங்க மணிகள்
  • தங்கக் கயிறு
  • தங்கத்திலான சாமி சிலைகள்
  • தங்கக் கிரீடங்கள்
  • தங்க மாலைகள்
     இவை மூட்டைகளில் கட்டிவைக்கப்பட்டிருந்தவை.இது போக வைரம்,வைடூரியம்,ரத்தினம் ஆகியவை மட்டும் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்குமாம்.
·         18 அடி நீளத்தில் 10 கிலோ எடை கொண்ட தங்கச் சங்கிலி.
·         1200 க்கும் மேற்பட்ட சரப்பொலிகள் என்று அழைக்கப்படும் தங்கச் சங்கிலிகள்.இவற்றில் அவல் என்ற வகையைச் சேர்ந்த ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.
·         3 மணிமகுடங்கள்
·         தங்கத்தாம்பாளங்களில் தங்க நாணயங்கள்-450 கிலோ
·         சொர்ணத்தண்டு என்று அழைக்கப்படும் தங்கத்தடி.
·         தங்க நெக்லஸ் மற்றும் தங்கப்பதக்கங்கள்.
·         தங்க்க்குடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தங்கக்காசுகள்.
·         பெரிய ரத்தினக் கற்கள் பதிக்கப்பெற்ற அரியாசனம்.
·         மன்னர்கள் அணியும் தங்கம் மற்றும் நவரத்தினக் கற்கள் பதிக்கப்பெற்ற கிரீடங்கள்.
·         பத்னபசாமி சிலை ஒன்று.
·         2 அடி நீள தங்க விஷ்ணு சிலை
·         18 அடி உயர 35 கிலோ தங்க அங்கி.
·         கிருஷ்ணதேவராயர் காலத்து ராசிக்கல் மோதிரங்கள்
·         கிழக்கிந்தியக் கம்பெனி தங்க நாணயங்கள்.
    இன்னும் திறக்கவேண்டிய அறைகள் உள்ளன.


சாய்பாபாவின் அறையில் இதுவரை...

கடந்த ஏப்ரல் 24ம் தேதி மரணம் அடைந் சத்ய சாய்பாபாவின் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சாய்பாபா தங்கியிருந்த யஜுர் மந்திர் கட்டடத்தில் உள்ள அவரது தனி அறை கடந்த மாதம் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதில் 98 கிலோ தங்கம், 307 கிலோ வெள்ளி, 12  கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது.
பின்னர் சில நாட்கள் கழித்து யஜுர் மந்திர் கட்டடத்தில் சாய்பாபாவின் தனி அறைக்கு அருகே உள்ள ஒரு அறையை அனந்தபூர் மாவட்ட இணை கலெக்டர் அனிதா ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்களும் உடன் இருந்தனர். அந்த அறையில், 116 கிலோ வெள்ளி பொருட்கள், 905 கிராம் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் உட்பட ரூ 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
      இன்னும் தோண்டவேண்டிய அறைகளும் உள்ளன;ஆராயவேண்டிய கணக்குகளும் உள்ளன

இந்தச் சாமியார் மட்டுமல்ல;இன்னும் கணக்குக் காட்டவேண்டிய சாமியார்களும் சோதனையிடவேண்டிய மடங்களும் ஏராளம் உள்ளன.

காசேதான் கடவுளடா....

திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவிலின் கடைசி ரகசிய அறையைத் திறக்கக் கூடாது என்று ஜூலை 8 அன்று உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.திருவாங்கூர் மன்னர் குடும்பத்தச் சேர்ந்த முன்னாள் இளவரசர் ராஜா மார்த்தாண்ட வர்மா தொடுத்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் ரவீந்திரன்,பட்நாயக் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்,”ரகசிய அறைகள் திறக்கப்பட்ட பிறகு பலருடைய பார்வை கடவுள் மீது இல்லை;ரகசிய அறைகளின் மீதுதான் உள்ளதுஎன்று கூறியிருக்கிறார்கள்.

தேசம்,ஞானம்,கல்வி,ஈசன் பூசை எல்லாம்
காசு முன் செல்லாதடி..... குதம்பாய் காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே...குதம்பாய் காசுக்குப் பின்னாலே... 

        - இது அன்றே பாடிய குதம்பைச் சித்தரின் பாடல்
                                              நன்றி:உண்மை (ஜுலை 16-31,2011)