Sunday, September 12, 2010

தொடரும் வறுமையும் ஏழுமலையானின் 2 லட்சம் கோடி ரூபாயும்

இந்திய நாடாளுமன்றம் முடங்கியது; எதிர்க்கட்சிகள் போர்க்கோலம்; என்ற செய்திகள் அண்மைக்காலமாக ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போதும் வந்துகொண்டிருக்கிறது. எதற்காக நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள்? அரசின் ஊழலைக் கண்டித்து அல்லது அரசு தோல்வி அடைந்துவிட்டது எனவே பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்தி அல்லது இந்த அமைச்சர் முறை கேட்டில் ஈடுபட்டுள்ளார், அதனால் அரசுப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது எனவே அவரை பதவிநீக்கம் செய்து விசாரிக்க வேண்டும் இப்படி ஏதாவது ஒரு காரணம் முன் வைக்கப்படும்.

இவையெல்லாம் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது விலைவாசிப் பிரச்சினை. இந்திய விடுதலைக்குப் பின் நாடாளுமன்றத்தில் வழக்கமாகப் பாடப்படும் பாட்டு இது. இதற்கு அரசும் தயாராக ஒரு பதிலை வைத்திருக்கும். வறுமையை ஒழிக்க ஒரு திட்டம் தீட்டியிருக்கிறோம். அதனைச் செயல்படுத்த உலக வங்கியை நாடியிருக்கிறோம். அங்கு கடன் வாங்கி நிறைவேற்றப்படும் என்று பதில் சொல்லிவிடும்.

இது மட்டுமல்ல, கடந்த 63 ஆண்டுகளாக இந்தியப் பிரதமரின் ஒவ்வொரு சுதந்திர தின உரையின் போதும் வறுமை ஒழிப்பு முழக்கம் இடம்பெறாமல் இருந்ததில்லை. ஆனால், இதுவரை வறுமை ஒழிந்த பாடும் இல்லை.
இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் என்ன காரணம்? முதன்மையான காரணமாகச் சொல்லப்படுவது நிதிப்பற்றாக்குறை என்பதுதானே. நிதி இல்லை அதனால் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. எனவே உலக வங்கியிடம் ஓட வேண்டியிருக்கிறது. உலக வங்கியோ, வேறு நாடுகளோ வறுமை ஒழிப்புக்கு ஓரளவுக்குத்தான் நிதி அளிக்கும். வளர்ச்சித்திட்டங்களுக்கு வழங்கும் அளவுக்கு அவை வறுமை ஒழிப்புக்கு வழங்காது.

அப்படியானால் வறுமை ஒழிப்புக்கு நம் நாடேதான் நிதி ஆதாரங்களைத்தேட வேண்டும். பொருளாதார நெருக்கடியால் உரிய அளவுக்கு நிதி ஆதாரங்களை அரசுகளால் திரட்ட முடியவில்லை. எனவே, அரசுகள் வரி விதிப்புகளையும், சலுகை குறைப்புகளையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாகின்றன. இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே 8 கோடி குடும்பங்களும், வறுமைக் கோட்டுக்கு மேலே 9.5 கோடி குடும்பங்களும் அந்த்யோதயா திட்டத்தின் கீழ் வரும் 2.5 கோடி குடும்பங்களும் மென்மேலும் வறுமைக்கும் பட்டினிக்கும் தள்ளப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.
ஒட்டு மொத்தமாக, நாட்டின் 80 சதவீத மக்களின் வாழ்நிலை மோசமடைந்து வருவதாக அந்த்த் தகவல் சொல்லுகிறது. நாட்டின் 50 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு போதிய உணவில்லை. அதனால், எலும்பும் தோலுமாக உள்ளனர். 70 சதவீதத்திற்கும் மேலான குழந்தைகள் புரதச்சத்துப் பற்றாக்குறையுடன் பிறந்து அடிக்கடி நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி பாதிக்கப்படுகின்றன. 60சதவீதத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் ரத்தசோகை நோயால் பரவலாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநிலங்களில் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மிக மோசமான வறுமையிலும் பசி, பட்டினியிலும் படாதபாடுபடுகிறார்கள். ஒருநாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு உண்பவர்களின் என்ணிக்கை 25 சதவீதத்திற்கும் அதிகம். இந்தக் கணக்குகள் ஒரு புறம் இருக்க மத்திய அரசே நாடு முழுவதும் இப்போது 6.5 கோடி குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பதாகக் கூறியுள்ளது. ஆனால், அய்.நாவின் ஆதரவுடன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சியின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த எண்ணிக்கை 42 கோடி என்று தெரிய வந்துள்ளது. இதுதான் இன்றைய இந்திய நிலை.

இந்திய ஏழைகளின் நிலை இப்படி இருக்க, இன்னொரு செய்தியும் அண்மையில் வந்துள்ளது. அது பணக்காரக் கடவுள் திருப்பதி வெங்கடாஜலபதி பற்றியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நகை மற்றும் சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க உத்தரவிடும்படி கோரி, நெல்லூரை சேர்ந்த பெஜவாடா கோபால் ரெட்டி என்பவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏழுமலையானின் நகைகள் மற்றும் அசையா சொத்துகளை நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்து விவரம் அளிக்கும்படி உத்தரவிட்டது.

அதன்படி கற்களின் மதிப்பு, தரத்தை மதிப்பிடுவதில் சிறந்து விளங்கும் நிபுணர்கள் மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் இருந்து அழைக்கப்பட்டு, திருமலையில் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் ஏழுமலையானின் நகைகளை மதிப்பீடு செய்யப்பட்டன. இந்த குழுவினர் தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் விலை உயர்ந்த கற்கள் பதித்த நகைகள் என 3 வகையாகத் தரம் பிரித்து மதிப்பீடு செய்தனர். அந்த அறிக்கையை தேவஸ்தான அதிகாரிகளிடம் ஜூலை 29 அன்று ஒப்படைத்தனர். அதில், ஏழுமலையானுக்கு மொத்தம் 11.5 டன் எடையுள்ள தங்க ஆபரணங்களும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம் என 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருப்பதாக நகை மதிப்பீட்டு நிபுணர்கள் கூறியுள்ளனர் என தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
வறுமை ஒழிப்புக்காக நிதியைத்தேடிக் கொண்டிருக்கும் ஆளும் அரசோ, அல்லது அதனைக் குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகளோ கோவில்களில் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தப் பணத்தைப் பற்றி வாய் திறப்பதில்லையே ஏன்? திருப்பதி கோவில் ஒன்றிலேயே இவ்வளவு பணம் என்றால், இன்னும் இந்தியாவில் உள்ள எல்லாக் கோவில்களிலும் இருக்கும் பணம் குறித்துப் பொது நல வழக்கு மூலம் கணக்கெடுத்தால் எவ்வளவு தேறும்! ஒரு நாட்டில் பணப் புழக்கம் அதிகரிக்கும் போதுதான் பொருளாதார சமநிலைக்கு அது உதவுவதாக இருக்கும்.

சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணத்தைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய கட்சிகள் இந்தியக் கோவில்களில் இருக்கும் பணத்தைப் பற்றிப் பேசுவதில்லையே ஏன்? கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவரவேண்டும் என்று குரல் கொடுக்கும் யாரும் கடவுளுக்குக் காட்டப்படும் பணத்தை வெளியே கொண்டுவரவேண்டும் என்று கூற முன்வருவதில்லையே ஏன்? கோவில்களில் கொட்டப்படும் பணம் எல்லாம் மக்களின் பணம் தானே.அது மக்களுக்குத்தானே பயன்படவேண்டும்.
சாணக்கியனைப் பற்றி சிலாகிக்கும் பண்டைய பாரத பெருமை பேசுவோருக்கு குறிப்பாக இந்துத்துவாக்களுக்கு ஒன்று தெரியுமா? கோவில்களை சாணக்கியன் கட்டச் சொன்னதே உண்டியல் வைத்து அரசுக்குப் பணம் சேர்க்கத்தான். வரி போடும் போது கூச்சல் போடும் மக்கள் கோவில் என்றால் சத்தம் போடாமல் பணத்தைப் போடுவார்கள் என்று மன்னனுக்கு யோசனை சொன்னவனே சாணக்கியன் தான். ஆக, சாணக்கிய நீதிப்படியே கூட கோவில் பணத்தை அரசு பயன்படுத்தலாமே.

நாட்டின் வறுமை நிலையைப் போக்க உருப்படியான ஆலோசனைகளை இதுவரை இந்துத்துவாக்கள் அளித்தது உண்டா? கோவில் கொள்ளைகளைத் தொடர பார்ப்பனீயம் மீண்டும் கோவில்களை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று குரல் எழுப்புகிறது. கோவில்களின் பெயருக்கு எழுதிவைக்கப்பட்ட நிலங்களை அதில் வசிப்போருக்குக் கொடுத்தால் இந்து முன்னணிகள் முண்டாதட்டுகின்றன. ஆக்கிரமிப்பு கோவில்களை அகற்றும் போதும் ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றனர்.

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வறுமை நிலை நீடிக்கப் போகிறது? நாட்டின் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும், அதிகாரத்திற்கு வரத்துடிப்பவர்களுக்கும் உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை இருந்தால், கோவில்களில் முடங்கியிருக்கும் பணத்தை வறுமை ஒழிப்புக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்துவது பற்றி ஒரு விவாதத்தையாவது தொடங்கவேண்டாமா? இந்த சுதந்திர தின உரையும் வறுமை ஒழிப்பு முழக்கத்தோடுதான் முடியப்போகிறதா? சுதந்திரம் வந்ததென்று சொல்லாதீங்க... சும்மாச் சொல்லிச் சொல்லி வெறும் வாயை மெல்லாதீங்க... என்ற பழைய பாடலுக்கு வேலையில்லாமல் செய்யவேண்டாமா?

No comments:

Post a Comment